உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. வழக்கு போட்டது; மு.க. ஸ்டாலின் பதில்


உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. வழக்கு போட்டது; மு.க. ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 13 Jan 2019 7:19 AM GMT (Updated: 13 Jan 2019 7:19 AM GMT)

உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. வழக்கு போட்டது என மு.க. ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.  இந்த கூட்டத்துக்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க. அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரக்கூடாது என்ற அடிப்படையில், தொடர்ந்து வழக்கு போடுவதுதான் தி.மு.க.வின் வேலை.

உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. ரத்து செய்ததாக தவறான குற்றச்சாட்டை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். உண்மையிலேயே ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்தார். ஆனால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தவர்கள் தி.மு.க.வினர் தான்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது கிராம சபை கூட்டம் நடத்துகிறார். அவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது குடிநீர் வசதி உள்பட எதையும் செய்ய தவற விட்டுவிட்டார் என கூறினார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து உள்ளார்.  இந்த பேட்டியில், கடந்த 2006ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தியது தி.மு.க. அரசு.  உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபொழுது நான் கிராமங்களுக்கு சென்றேன்.  4 கிராமங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மக்களிடம் பேசி சுமுக முறையில் தேர்தல் நடத்தினோம்.

ராமநாதபுரத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தினோம்.  தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம்.  தி.மு.க. ஆட்சியிலேயே கிராமங்களுக்கு கான்கிரீட் வீடுகள், நூலகங்கள் கட்டப்பட்டன.

பெரியார் பெயரில் சமத்துவபுரம் அமைத்தது தி.மு.க. அரசு.  கிராமப்புறங்களில் நமக்கு நாமே திட்டம் கொண்டு வந்தது தி.மு.க. என்று கூறினார்.  அவர் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. வழக்கு பதிவு செய்தது.  ஆனால் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வரவில்லை என்று கூறியுள்ளார்.

Next Story