கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்-அமைச்சர் பழனிசாமி வழக்கு


கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூ  சாமுவேல் மீது முதல்-அமைச்சர் பழனிசாமி வழக்கு
x
தினத்தந்தி 23 Jan 2019 11:39 AM GMT (Updated: 23 Jan 2019 11:39 AM GMT)

கோடநாடு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சென்னை,

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வந்த மேத்யூ சாமுவேல் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக சந்திப்பேன். நான் வெளியிட்ட செய்தி முதல்வர் பழனிசாமிக்கு எதிரானதுதான், ஆனால் தனிப்பட்ட கருத்து மோதல் இல்லை என கூறி இருந்தார்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் மேத்யூ  சாமுவேல் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து உள்ளார். கோடநாடு விவகாரத்தில் தன் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறார் என முதல் அமைச்சர் தரப்பில் ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.  தன்னை பற்றி அவதூறு பரப்புவதை தடுக்க கோரியும் அதில் கூறப்பட்டு உள்ளது.

அவசர வழக்காக,  வழக்கை நாளை எடுத்து கொள்வதாக நீதிபதி கல்யாண சுந்தரம் கூறி உள்ளார்.

Next Story