ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு டாக்டர்களை அனுப்ப அப்பல்லோ நிர்வாகம் ‘திடீர்’ மறுப்பு


ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு டாக்டர்களை அனுப்ப அப்பல்லோ நிர்வாகம் ‘திடீர்’ மறுப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:15 PM GMT (Updated: 5 Feb 2019 8:46 PM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு டாக்டர்களை அனுப்ப அப்பல்லோ நிர்வாகம் திடீரென மறுத்து உள்ளது. இதன்காரணமாக ஆணைய விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ டாக்டர்களை பொறுத்தமட்டில் 50-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையும் நடத்தி உள்ளது.

அப்பல்லோ டாக்டர்கள், பணியாளர்கள் என 13 பேரிடம் மட்டும் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. இதற்காக அப்பல்லோ டாக்டர்கள் 5 பேர், பணியாளர் ஒருவர் என 6 பேர் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அவர்கள் 6 பேரும் நேற்று ஆணையத்தில் ஆஜராகவில்லை.

இந்தநிலையில் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அப்பல்லோ டாக்டர்களின் வாக்குமூலம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படுவதால் 21 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளதால் அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே, அப்பல்லோ டாக்டர்களை தற்போதைக்கு விசாரணைக் காக ஆஜர்படுத்த இயலாது’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையின் போது அப்பல்லோ தரப்பு வக்கீல், ‘மற்றொரு தேதியில் விசாரணையை தள்ளிவைக்கும்போது டாக்டர்களை ஆஜர்படுத்துகிறோம். மற்றவர்களை விசாரணை நடத்துவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து விசாரணையை 11-ந் தேதிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தள்ளிவைத்தார். விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் ஆஜராவது தொடர்ந்து தடைபட்டு வருவது குறித்து ஆணையத்தில் கேள்வி எழுப்பினேன். அப்போது ஆணையம் தரப்பில், ‘அப்பல்லோ டாக்டர்களிடம் விசாரணையை முடித்த பின்னர் தான் ஓ.பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு அழைக்க முடியும். இப்போதைக்கு அழைக்க முடியாது. அவரை அழைப்பதில் சில சிரமங்கள் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக எங்களுக்கு தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், எனவே, ஓ.பன்னீர்செல்வத்தை விரைவில் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அதற்கு நீதிபதி, வருகிற 11-ந் தேதி விசாரணை தள்ளிவைப்பதாகவும், அன்றைய தினம் அப்பல்லோ அளிக்கும் பதிலை பொறுத்து ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தும் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின், கனிமொழி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை விசாரிக்க கோருவதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அவர்கள் கூறி வருவதால் தான் விசாரிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை செய்தால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள முடிச்சுகள் முழுவதும் அவிழ்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வருகிற 24-ந் தேதிக்குள் ஆணையம் விசாரணையை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் அப்பல்லோ டாக்டர்கள் தற்போதைக்கு ஆஜராக மாட்டார்கள் என்று அப்பல்லோ நிர்வாகம் மனு செய்திருப்பதால் ஆணைய விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, மேலும் கால அவகாசம் கோரும் நிலை ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story