திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ரெயில்வே தேர்வுக்கு பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்குகிறது


திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ரெயில்வே தேர்வுக்கு பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 4 March 2019 9:45 PM GMT (Updated: 4 March 2019 8:55 PM GMT)

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ரெயில்வே தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்குகிறது.

திருச்செந்தூர்,

ரெயில்வே துறை நடத்தும் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் காலிப்பணி இடங்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 30 வயது மிகாதவர்களுக்கு 10 ஆயிரத்து 628 காலி பணியிடங்களும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 33 வயது மிகாதவர்களுக்கு 24 ஆயிரத்து 649 காலி பணியிடங்களும் ரெயில்வே துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வுக்கு www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரெயில்வே நடத்தும் தொழில்நுட்பம் சாராத முதல் நிலை எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம்(ஏப்ரல்) 4-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது.

காலை 9.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும்.

இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.5,000 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.

பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் தங்கும் வசதி, உணவு கட்டணம் ரூ.4,000 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாளான அடுத்த மாதம் 4-ந் தேதி அன்று நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.5,000-க்கான டிமாண்ட் டிராப்ட்(கனரா வங்கி, ஐ.ஓ.பி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர் - 628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்படமாட்டாது.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04639-242998 என்ற தொலைபேசி எண்ணிலும், 94420 55243 மற்றும் 86829 85148 ஆகிய அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Next Story