மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவர்; கே.எஸ். அழகிரி


மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவர்; கே.எஸ். அழகிரி
x
தினத்தந்தி 19 March 2019 10:52 AM GMT (Updated: 19 March 2019 11:51 AM GMT)

மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மருத்துவத்திற்கான நீட் தேர்வு ரத்து, வேளாண்துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை, தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை, ஏழைகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய நடவடிக்கை உள்ளிட்ட விசயங்கள் தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.மு.க. தேர்தல் அறிக்கை தெளிவாக உள்ளது.  மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் தேர்தல் அறிக்கையிது என அவர் கூறியுள்ளார்.

இதன்பின் அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.  இதற்கான பணிகள் வேகமுடன் நடந்து வருகின்றன.  அதில், விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் உண்டு.  ஏழைகளின் வறுமையை போக்க திட்டங்கள் அறிவிக்கப்படும்.  மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story