பெரம்பலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செந்தில் குமாரின் மனுவை ஏற்க மறுப்பு
பெரம்பலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரின் மனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்து விட்டார்.
பெரம்பலூர்,
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு ஏப்ரல் 18ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ந்தேதி தொடங்கியது. இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமை செயலகத்தில் அளித்த பேட்டியில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும். வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய 26ந்தேதி கடைசி நாள் ஆகும் என கூறினார்.
பெரம்பலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செந்தில் குமார் போட்டியிட இருந்துள்ளார். இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய தேர்தல் அலுவலகத்திற்கு அவர் சென்றுள்ளார். ஆனால் 3 மணிக்கு வேட்பு மனு தாக்கல் நேரம் முடிந்த நிலையில், 3.20 மணிக்கு தாமதமாத வந்ததால் அவரது வேட்பு மனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்து விட்டார்.
Related Tags :
Next Story