கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; ஒருவர் கைது


கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; ஒருவர் கைது
x
தினத்தந்தி 31 March 2019 5:06 AM GMT (Updated: 31 March 2019 5:06 AM GMT)

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை பன்னிமடை பகுதியை சேர்ந்த தம்பதியின்  6 வயது பெண் குழந்தை திப்பனூர் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  கடந்த திங்கட்கிழமை பள்ளி சென்று திரும்பிய சிறுமி அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். கடைக்கு போன சிறுமி நீண்ட நேரமாக திரும்பிவராததை அடுத்து பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.

தகவலறிந்து வந்த தடாகம் போலீசாரும் விடிய விடிய குழந்தையை தேடிய நிலையில், மறுநாள் காலை அதே பகுதியிலுள்ள மற்றொரு வீட்டின் அருகே முட்டுச்சந்தில், முகத்தில் டி சர்ட் சுற்றப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் முழுவதும் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

பின்னர் அந்த சிறுமியை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.  குழந்தையின் வாய், மூக்கில் துணி வைத்து இறுக்கமாக மூடப்பட்ட தகவல் எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.  இதில் சந்தோஷ்குமாரை விசாரித்ததில் சிறுமியை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story