சாலைகள் அமைப்பதற்கு மக்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்


சாலைகள் அமைப்பதற்கு மக்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 July 2019 11:45 PM GMT (Updated: 21 July 2019 9:20 PM GMT)

சாலைகள் அமைப்பதற்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை,

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ.24 கோடியே 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய புறவழிச்சாலை மற்றும் ரூ.5 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 மேம்பாலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலை உள்கட்டமைப்பு என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். எந்தவொரு மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு சிறந்து விளங்குகின்றதோ அந்த மாநிலம் தொழில் வளம் நிறைந்த சிறந்த மாநிலமாக இருக்கும். தமிழகத்தின் சாலை மேம்பாடு இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.

சாலை அமைக்கும்போது நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால், மக்கள் மனமுவந்து நிலம் கொடுத்தால் தான் இதுபோன்ற சாலைகளை அமைத்து விபத்து, உயிர் சேதம், பயண நேரம் ஆகியவற்றை குறைக்க முடியும். எரிபொருள் மிச்சப்படும். போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான் எங்களுடைய லட்சியம்.

இந்தியாவின் ராணுவத் தளவாடங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்கு மிகப்பெரிய தொழிற் சாலையை சேலம் இரும்பாலை பகுதியில் மத்திய அரசு அமைக்க இருப்பதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தற்போது, நீர்மேலாண்மை மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்க ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகளை விவசாய சங்கங்களிடம் ஒப்படைத்து, விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டத்தினை நிறைவேற்றி வருகிறோம்.

இதன்மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுவதால் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு இயற்கை உரமாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேட்டூர் அணையில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓமலூர்-மேச்சேரி சாலையில் பிரமாண்டமான வர்த்தக மையம் கட்டப்படும். விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை அங்குள்ள மார்க்கெட்டில் ஆன்-லைன் மூலமாக விற்பனை செய்துகொள்ளலாம். விலை கட்டுப்படியாகவில்லை என்றால் அங்குள்ள குளிர்பதன கிடங்கில் பாதுகாத்து வைத்துக்கொள்ளலாம். அதற்கு வாடகை எதுவும் இல்லை.

சென்னை அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் உணவுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களை உணவு பூங்காவில் விற்பனை செய்கின்றபோது உரிய விலை கிடைக்கும். புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதன் மூலம் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

எடப்பாடியில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடியே 91 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்துவைத்தார்.

21,493 மாணவ-மாணவிகளுக்கு ரூ.26 கோடியே 37 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினி, 182 பேருக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் கடன் உதவியையும், 22,294 பயனாளிகளுக்கு ரூ.36 கோடியே 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Next Story