அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : சென்னையில் இன்று நடக்கிறது


அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் :  சென்னையில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 6 Dec 2019 2:24 AM GMT (Updated: 6 Dec 2019 2:24 AM GMT)

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

சென்னை, 

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. முதல்-அமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் 56 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் இடங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலின்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியில் தொடருகின்றன.

தற்போது, ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதில் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க.வே போட்டியிட இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

Next Story