மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது -காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்


மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது -காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
x
தினத்தந்தி 16 Jan 2020 10:59 AM GMT (Updated: 16 Jan 2020 10:59 AM GMT)

ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என திமுகவில் ஒரு பெரிய கூட்டம் செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி கூறி உள்ளார்.

சென்னை

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சினை, மறைமுகத் தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வந்தது. தி.மு.க., கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். மறைமுகத் தேர்தலில் தி.மு.க.வை விட கூடுதல் இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.

அதாவது, மறைமுக வாக்கெடுப்பின்போது, தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. இது தி.மு.க. தலைமையை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பின்னர், ‘தி.மு.க.வும், காங்கிரசும் எப்போதும் இணைந்த கரங்கள்’ என்று அழகிரி தெரிவித்தார்.

திமுகவின் டி.ஆர்.பாலு கூறுகையில், திமுக குறித்த அறிக்கையை கே.எஸ்.அழகிரி தவிர்த்திருக்கலாம். அதை தலைவர் மீது வைத்த குற்றச்சாட்டாகவே நாங்கள் பார்க்கிறோம். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்புமா என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்றார்.

இதனிடையே கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி போனால் போகட்டும். எங்களுக்கு என்ன நஷ்டம் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை? என்று துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் இளம் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-

ஸ்டாலினை முதல்வராக்க கூடாது என திமுகவில் ஒரு கூட்டம் உள்ளது. ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது. யாருக்கும் யார் அடிமை இல்லை. யாருடைய அவமானங்களையும் யாரும் ஏற்க  முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கு தோழமையை பற்றி சொல்லிகொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை துரைமுருகன் சரியாக படிக்க வேண்டும்.

திமுக வேண்டுமானால் தனித்து நின்றுதான் பார்க்கட்டுமே. காங்கிரஸ் தோழமை குணம் கொண்டவர்கள். தோழமை சரி இல்லை என்றால் மாறிக்கொள்ளலாம்.

கூட்டணியில் இல்லாதபோது கூட சோனியாகாந்தியால் கனிமொழிக்கு எம்பி பதவி தரப்பட்டது என்று கூறினார்.

இதுபோல் மோகன் குமாரமங்கலம் ட்விட்டர் மற்றும் முகநூலில் துரைமுருகனை விமர்சித்து கருத்து வெளியிட்டு உள்ளார்.

மோகன் குமாரமங்கலத்தின் பதிவு பின்வருமாறு;-

காட்பாடியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு.துரைமுருகன் அவர்கள் காங்கிரஸ் பற்றி பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி போனால் எங்களுக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று திரு.துரைமுருகன் கூறினார். குறிப்பாக எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று சொன்னார். துரை முருகன் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஆகிவிட்டது என்று அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

2006-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை அரசாங்கத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் எந்தவிதமான பங்கையும் கேட்காமல் பெருந்தன்மையுடன் வழிநடத்தினோம். அந்த ஆட்சியில் திரு.துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அன்றைக்கு அவருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் தயவு தன்னுடைய பதவியை காப்பாற்றுவதற்காக தேவைப்பட்டது என்பதை அவர் மறந்து விடக்கூடாது.

2011-ல் உங்களுடைய கூட்டணியில் தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்று தெரிந்தும் கூட அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதாவின் அழைப்பை புறக்கணித்தோம். கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டோம். அன்றைக்கு உங்களுக்கும் காங்கிரஸ் தேவைப்பட்டது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

2019 வேலூர் இடைத்தேர்தலில் உங்கள் மகன் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸின் பங்கில்லை என்று நினைக்கிறீர்களா? திரு.துரைமுருகன் என்னைவிட வயதில், அனுபவத்தில் பெரியவர். ஆக அவருக்கு நான் அறிவுரை கூறும் இடத்தில் இல்லை. வேண்டுகோள் மட்டுமே அவரிடம் வைக்க விரும்புகிறேன். காங்கிரஸ் மட்டுமல்ல உங்களுடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யாரையும் குறைத்து மதிப்பிட்டு பேசாதீர்கள் என கூறி உள்ளார்.

Next Story