முஸ்லிம்கள் போராட்ட பின்னணியில் தி.மு.க. உள்ளது - இல.கணேசன் குற்றச்சாட்டு


முஸ்லிம்கள் போராட்ட பின்னணியில் தி.மு.க. உள்ளது - இல.கணேசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Feb 2020 11:00 PM GMT (Updated: 16 Feb 2020 10:45 PM GMT)

முஸ்லிம்கள் போராட்டத்துக்கு பின்னணியில் தி.மு.க. உள்ளது என இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, 

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஓம் சக்தி விநாயகர் கோவிலில் பா.ஜ.க. மத்திய சென்னை(கிழக்கு) மாவட்டம் சார்பில் ஏழைகளுக்கு வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொது செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் கே.மூர்த்தி முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர். அப்போது மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா உடனிருந்தார். இதைத்தொடர்ந்து இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுக்க கலந்து ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படும். முறையான அறிவிப்பு ஒரு வாரத்தில் வர வாய்ப்பு உள்ளது. முஸ்லிம்கள் போராட்டத்தால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க தமிழக அரசு 6 உயர் போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது பாராட்டுக்குறியது. பல்வேறு முறையில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். இதன் பின்னணியில் தி.மு.க. உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு பா.ஜ.க. உறுதுணையாக இருக்கும். போலியான வாக்காளர்களை சேர்த்து, நாட்டு மக்களின் நன்மையை விட ஓட்டு வங்கியை முக்கியமாக தி.மு.க. கருதுகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு அனைவருக்கும் பொதுவானது. முஸ்லிம்கள் பாகிஸ்தானை விட இந்தியாவில் சுதந்திரமாக வாழ்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் 70 ஆண்டுகள் தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புகள் இல்லை. அது தேவையும் இல்லை. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் தெளிவான சிந்தனையுடன், தேசபக்தியுடன் உள்ளனர். அதில் சிறுபான்மையினருள் சிறுபான்மையினர் தான் தெருவில் போராடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story