கொரோனா எதிரொலி: மட்டன், மீன் விலை தொடர்ந்து உயர்வு - கோழிக்கறி விற்பனை அடியோடு பாதிப்பு


கொரோனா எதிரொலி: மட்டன், மீன் விலை தொடர்ந்து உயர்வு - கோழிக்கறி விற்பனை அடியோடு பாதிப்பு
x
தினத்தந்தி 15 March 2020 9:30 PM GMT (Updated: 15 March 2020 8:53 PM GMT)

கொரோனா வைரஸ் எதிரொலியாக மட்டன், மீன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில் கோழிக்கறி விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் தாக்கும் என்று வதந்தி கிளம்பியதால் பெரும்பாலான மக்கள் கோழிக்கறி சாப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறார்கள்.

கடந்த ஒரு மாதமாக கோழிக்கறி கடைகள் விற்பனை இல்லாமல் வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன. உயிரோடு உள்ள கோழி ஒரு கிலோ ரூ.50-க்கும் உரித்த கோழிக்கறி கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் கோழிகள் விற்பனையானது. தற்போது அது 3 ஆயிரமாக குறைந்து விட்டது. பிராய்லர் கோழிக்கறியை மக்கள் வெறுத்து வந்தாலும் நாட்டுக்கோழி, காடை வகைகளை விரும்பி வாங்குகிறார்கள். இதனால் நாட்டுகோழி, காடை விலை உயர்ந்து வருகிறது.

உயிரோடு ஒரு கிலோ நாட்டுகோழி ரூ.230-க்கு விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.290 ஆக உயர்ந்துவிட்டது. ஒரு காடை ரூ.30க்கு விற்பனையானது. தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை அதிகரித்துள்ளது. கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் நாட்டுக்கோழிக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

மட்டன்(ஆட்டிறைச்சி), மீன் சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு இருக்காது என்று மக்கள் நம்புவதால் ஆட்டிறைச்சி, மீன் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.650-க்கு விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.750 ஆக உயர்ந்து விட்டது.

இன்னும் ஒரு மாத்தில் அதன் விலை கிலோவுக்கு ரூ.900 வரை உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை மாவட்ட இறைச்சி மொத்த வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் எம்.அன்வர் பாஷா குரோசி தெரிவித்தார்.

கொரோனா பீதியால் கோழிக்கறி பிரியர்கள் தற்போது மீன் வகைகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

மவுசு ஏற்பட்டுள்ளதால் மீன்களின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தேவை அதிகரித்துவரும் நிலையில் எதிர்பார்க்கும் அளவுக்கு கடலில் மீன்கள் கிடைப்பது இல்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது கடலில் மீன் வளர்ச்சிக்கு தேவையான சீதோஷண நிலை இல்லை.

இதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்வரத்து குறைவாக உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ‘மீன்களின் ராணி’ என்று அழைக்கப்படும் வஞ்சிரம் மீன் கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.680-க்கு விற்பனையானது. தற்போது கிலோ ரூ.780 ஆக உயர்ந்துவிட்டது.

இதேபோல கருப்பு வாவல் மீன் கிலோ ரூ.310-க்கு விற்பனையானது, தற்போது ரூ.350 முதல் ரூ.420 வரை உயர்ந்துவிட்டது. சங்கரா கிலோ ரூ.170-ல் இருந்து ரூ.210 ஆகவும், பாறை மீன் ஒரு கிலோ ரூ.250-ல் இருந்து ரூ.300 ஆகவும், சீலா மீன் கிலோ ரூ.260-ல் இருந்து ரூ.310 ஆகவும், சிறிய ரக இறால் கிலோ ரூ.250-ல் இருந்து ரூ.300 ஆகவும் விற்பனையாகின்றன.

பெரிய இறால் கிலோ ரூ.320-ல் இருந்து ரூ.350 ஆகவும், கிலோ ரூ.300-க்கு விற்பனையான கொடுவா மீன், ரூ.360 ஆகவும் உயர்ந்துவிட்டது என்று அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி தெரிவித்தார்.

மீன்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை குறித்து விளக்குவதற்காக சென்னை தீவுத்திடலில் வருகிற 1-ந் தேதி முதல் மே மாதம் 1-ந் தேதி வரை அகில இந்திய மீனவர்கள் சங்கம் சார்பில் மீன் உணவு திருவிழா நடைபெறுகிறது. இதில் விதவிதமான மீன் உணவு வகைகள் விற்பனை செய்ய இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story