பொருளாளர் பதவியில் இருந்து விலகினார் தி.மு.க. பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்


பொருளாளர் பதவியில் இருந்து விலகினார் தி.மு.க. பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்
x
தினத்தந்தி 16 March 2020 10:15 PM GMT (Updated: 16 March 2020 8:46 PM GMT)

தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுகிறார். அவர் வகித்துவந்த பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க.வில் பொதுச்செயலாளராக இருந்தவர் க.அன்பழன். அவர் கடந்த 7-ந் தேதி சென்னையில் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி காலியானது. தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி என்பது மிகமுக்கியமான பதவியாகும். 1949-ல் அண்ணா தி.மு.க.வை தொடங்கியதும் அவர் பொதுச்செயலாளராக இருந்தார்.

பெரியாருக்காக தி.மு.க. தலைவர் பதவி எப்போதும் காலியாக இருக்கும் என அப்போது அறிவித்திருந்தார். எனவே முழு அதிகாரங்களும் பொதுச்செயலாளர் கைவசம் இருக்கும்படியாகவே தி.மு.க. சட்டதிட்டங்கள் அப்போது உருவாக்கப்பட்டிருந்தன. அண்ணா மறைகின்ற வரை தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியே இருந்தது.

1969-ல் அண்ணா மறைவைத் தொடர்ந்து, தற்காலிக பொதுச்செயலாளர் ஆனார் நெடுஞ்செழியன். அப்போது முதல்-அமைச்சர் பொறுப்பை கருணாநிதி ஏற்றார்.

இந்த காலகட்டத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை கொண்டு வந்தனர். பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் கருணாநிதி போட்டியிடுவதாக அறிவித்தார். நெடுஞ்செழியனும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தார். அப்போது இந்த பிரச்சினையில் சமரச தீர்வு எட்டப்பட்டது. அதன்படி, நெடுஞ்செழியன் பொதுச்செயலாளர் என்றும், தலைவர் பதவியை உருவாக்கி கருணாநிதியை அந்தப் பொறுப்பில் அமர்த்துவது என்றும் முடிவானது. தலைவர் பதவிக்கு சிறப்பு அதிகாரங்களும் அப்போது வழங்கப்பட்டன.

1977 வரை நெடுஞ்செழியன் தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை வகித்தார். 1977-ல் நெடுஞ்செழியன் தனிக் கட்சி தொடங்கினார். இதன்பின்பு 1977-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை அன்பழகன் பொதுச்செயலாளராக இருந்துள்ளார்.

அன்பழன் மரணம் அடைந்ததையொட்டி பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான அவரச பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படுகிறார். இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 15-ம் தேதி அறிக்கையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வருகிற 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 16-3-2020 அன்று கடிதத்தின் வாயிலாக பொருளாளர் துரைமுருகன், பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விழைவதாகவும் எனவே, அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். எனவே 29-3-2020 அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

துரைமுருகன், தான் வகித்துவந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால். தி.மு.க. பொதுக்குழுவில் புதிய பொருளாளர் தேர்வு செய்ப்படுகிறார். போட்டியில்லாமல் பொருளாளர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு பெற்ற கே.என்.நேரு, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரில் யார் பொருளாளராக தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது வருகிற 29-ம் தேதி தி.மு.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story