கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? - டி.ஜி.பி. விளக்கம்


கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? - டி.ஜி.பி. விளக்கம்
x
தினத்தந்தி 23 March 2020 8:45 PM GMT (Updated: 23 March 2020 7:35 PM GMT)

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையின் விவரம் வருமாறு:-

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் இருக்க அனைவரும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். குறிப்பாக கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.

தமிழக முதல்-அமைச்சர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை உத்தரவாக வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழக போலீஸ் துறையில் உள்ள அனைத்து பிரிவினரும் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் கைகளை சுத்திகரிப்பான் மூலம் சுத்தம் செய்து, ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகுதான் அவர்களை போலீஸ் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

* போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை காற்றோட்டமான அறைக்குள் மட்டும் அனுமதிக்க வேண்டும். முழுவதுமாக மூடப்பட்ட ‘ஏர் கண்டிசன்’ அறைக்குள் அனுமதிக்க கூடாது.

* போலீஸ் நிலையங்களுக்கிடையே தகவல் பரிமாற்றங்களை ‘ஆன்-லைன்’ வழியாக மட்டுமே நடத்த வேண்டும். தபால் போன்றவற்றை அலுவலக வாசலிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும். போலீஸ் நிலையங்களில் தேவையின்றி ஆலோசனை கூட்டம் நடத்தக்கூடாது.

* உடற்பயிற்சி கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை மூட வேண்டும். போலீஸ் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து போலீஸ் நிலையங்களும் மாவட்ட மருத்துவமனை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பது தொடர்பாக முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story