மேட்டூர் அணையை 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு காவிரி நீர் போய் சேராதது கவலை அளிக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை


மேட்டூர் அணையை 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு காவிரி நீர் போய் சேராதது கவலை அளிக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2020 9:13 PM GMT (Updated: 25 Jun 2020 9:13 PM GMT)

மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு இன்னும் காவிரி நீர் போய் சேராதது கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்தும் இன்னும் கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீர் போய்ச் சேரவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது. அணை திறக்கும் போதே “காவிரி கடை மடைப்பகுதிகளுக்கும் குறுவைச் சாகுபடிக்கு நீர் செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்“ என்று முதல்-அமைச்சரை வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால் தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக பெயரளவில் அறிவித்து, அதை மேற்பார்வையிட ஒரு கமிட்டியை பகட்டாக அ.தி.மு.க. அரசு அமைத்ததே தவிர உண்மையிலேயே தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவோ அல்லது முறைப்படி முழுமையாக தூர்வாரவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கடை மடைக்கு காவிரி நீர் வரவில்லை என்று டெல்டா விவசாயிகள் கதறுவதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை கண்டு கொள்ளவும் இல்லை.

10 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படுவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் நனைவதற்கு மட்டுமே அந்த நீர் பயன்படுகிறது. குறுவை விவசாய பணிகள் முழுமைக்கும் முறையாக நீர்ப்பாசனம் கிடைப்பதென்றால் குறைந்தபட்சம் தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீராவது திறந்துவிடப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் ஒருமனதான கோரிக்கையாக இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் கர்நாடகாவிடமிருந்து தண்ணீரை பெறுவதற்கு உரிய முயற்சிகளை முதல்-அமைச்சர் இதுவரை மேற்கொள்ளவும் இல்லை.

தரமற்ற விதை நெல்

திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரும் கடை மடைப்பகுதிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. கடை மடைப்பகுதிவரை நீர் செல்வதற்கு சாளுவன் ஆற்றை உடனே தூர்வாருங்கள் என்று கோரிக்கை விடுத்து கோட்டூர் ஒன்றியத்தில் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த ஆற்று நீர் பாசனத்தை நம்பி மட்டும் 9 ஆயிரத்து 197 ஏக்கர் நிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றாமல் அலட்சியமாக இருந்தது தமிழக அரசு. தற்போது தாமதமாக தொடங்கிய தூர்வாரும் பணிகளையும் முறைப்படி செய்யாமல், கமிஷனுக்காகவே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

விவசாயிகளுக்காக வழக்கம் போல் பல அறிவிப்புகளை அ.தி.மு.க. அரசு வெளியிட்டிருந்தாலும், அவை வெற்று காகித அறிவிப்புகளாகவே இருக்கின்றன. குறிப்பாக, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயக்கடன் வழங்கப்படுவதில்லை.


கடை மடைப்பகுதிக்குக் காவிரி நீரும் செல்லவில்லை. நீர் சென்ற பகுதிகளிலும் வேளாண்மை செய்வதற்கு தேவையான கடனோ, விவசாய இடுபொருள்களோ கிடைக்கவில்லை. ஜூன் 12-ந் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டும் காவிரி டெல்டா விவசாயிகள் தமிழக அரசின் மெத்தனத்தால் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் வேதனைப்படுகிறார்கள். இந்தநிலையில், நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் நீரேற்று சங்கம் என்ற பெயரில் கிணறு வெட்டி நீர்ப்பாசன வசதி செய்வதற்கு ஒரு விவசாயிக்கு ரூ.1.25 லட்சம் வரை மெகா வசூல் செய்யப்படுவதாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த வசூல் அரசின் சார்பில் நடக்கிறதா? அரசு மட்டத்தில் இல்லாமல் அமைச்சர் பெயரில் நடக்கிறதா? என்ற சர்ச்சை நாமக்கல் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியிருக்கிறது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்.


ஆகவே, அ.தி.மு.க. ஆட்சியில், தமிழக விவசாயிகள் அனைவருமே தொடர்ந்து துன்பத்திலும், துயரத்திலும் வாடுகிறார்கள்.

விவசாயிகளின் வேதனைக்குரல்கள் இதுவரை முதல்-அமைச்சரின் காதுகளுக்கு எட்டவில்லை என்றாலும், தூர்வாரும் பணிகளைப் பார்வையிட காவிரி டெல்டாவிற்கு செல்லும் நேரத்திலாவது இந்த வேதனைக்குரல்கள் எட்டும் என்று நம்புகிறேன். அதிகாரிகளை அழைத்துப்பேசி கடை மடைப்பகுதிக்கும் காவிரி நீர் செல்வதற்கு, தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவும், விவசாயிகளுக்கு தேவையான கடன் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளையும் எடுத்திடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story