மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா


மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Aug 2020 9:58 PM GMT (Updated: 11 Aug 2020 9:58 PM GMT)

தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளும் விதிவிலக்கு அல்ல. அந்த வகையில் சென்னை, காஞ்சீபுரம், கோவை போன்ற மாவட்ட கலெக்டர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் கூடுதல் போலீஸ் கமிஷனர், இணை போலீஸ் கமிஷனர்கள், துணை போலீஸ் கமிஷனர்கள் என ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

இந்தநிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான வருவாய்த்துறை நிர்வாக கமிஷனர் பணீந்திர ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான போக்குவரத்துத்துறை கமிஷனர் தென்காசி ஜவஹருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தற்போது அவர்கள் 2 பேரும் சென்னை கிண்டி கிங்ஸ் ஆராய்ச்சி மைய வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தங்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அவர்கள் 2 பேரும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story