டாக்டர் ராமதாசுடன் இன்று அமைச்சர்கள் சந்திப்பு: அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி குறித்து முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Jan 2021 2:47 AM GMT (Updated: 11 Jan 2021 2:47 AM GMT)

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசுடன் இன்று அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர்.

சென்னை, 

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் இன்று மதியம் அமைச்சர்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்தது. ஆனால், வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலை தொடருமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற பா.ம.க. நிர்வாகக் குழு கூட்டத்தில், முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. அதாவது, பொங்கலுக்கு பிறகு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடருக்கு முன்பாக, வன்னியர்களுக்கான 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தாமதமாகும் பட்சத்தில் பா.ம.க. செயற்குழுவை உடனடியாக கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், பா.ம.க. போராட்டத்தை கையில் எடுத்துள்ளதால், டாக்டர் ராமதாசை சந்தித்து பேச அ.தி.மு.க. தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று மதியம் 12 மணிக்கு திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பின்போது, பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளும் உடன் இருக்கிறார்கள்.

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து இந்த பேச்சு வார்த்தையில் முக்கிய அம்சமாக இருக்கும் என்றாலும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்வது குறித்தும் பேசப்பட இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


Next Story