தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள், தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு


தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள், தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2021 4:44 AM GMT (Updated: 14 Jan 2021 4:44 AM GMT)

தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு விருதுகள் பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்கள்.

அதன்படி, திருவள்ளுவர் திருநாள் விருதுகள் பெறுவோர் விவரம் வருமாறு:-

2021-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது முனைவர் வைகைச்செல்வனுக்கு வழங்கப்படுகிறது. 2020-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது அ.தமிழ்மகன் உசேனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது வரகூர் அ.அருணாச்சலத்துக்கும், பேரறிஞர் அண்ணா விருது மறைந்த கடம்பூர் எம்.ஆர்.ஜனார்த்தனனுக்கும், பெருந்தலைவர் காமராஜர் விருது முனைவர் ச.தேவராஜூக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது அறிவுமதி என்கிற மதியழகனுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது வி.என்.சாமிக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது முனைவர் வீ.சேதுராமலிங்கத்துக்கும் வழங்கப்படுகின்றன.

மேலும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்கும் வகையில் செயலாற்றி வரும் சிறந்த தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கத்தக்க வகையில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியாலும் தமிழறிஞர்களின் பெயரில் புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறுவோரின் பெயர்கள் வருமாறு:-

2020-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்படுகிறது. கபிலர் விருது செ.ஏழுமலைக்கும், உ.வே.சா விருது கி.ராஜநாராயணனுக்கும், கம்பர் விருது டாக்டர் எச்.வி.ஹண்டேவுக்கும், சொல்லின் செல்வர் விருது நாகை முகுந்தனுக்கும், உமறுப்புலவர் விருது ம.அ.சையத் அசன் என்கிற பாரிதாசனுக்கும், ஜி.யு.போப் விருது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முனைவர் உல்ரீகே நிகோலசுக்கும், இளங்கோவடிகள் விருது மா.வைத்தியலிங்கனுக்கும், அம்மா இலக்கிய விருது தி.மகாலட்சுமிக்கும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது ஆ.அழகேசனுக்கும், மறைமலையடிகளார் விருது தி.தாயுமானவனுக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது முனைவர் கோ.ப.செல்லம்மாளுக்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் ஊரன் அடிகளுக்கும், காரைக்கால் அம்மையார் விருது மோ.ஞானப்பூங்கோதைக்கும் வழங்கப்படுகிறது.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நாளிதழ் விருது தினமணி நாளிதழுக்கும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வார இதழ் விருது கல்கி வார இதழுக்கும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது செந்தமிழ் திங்களிதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு.சிவமணிக்கும், வீரமாமுனிவர் விருது ஹாங்காங்கைச் சேர்ந்த முனைவர் கிரிகோரிஜேம்சுக்கும், சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது சோ.சேசாச்சலம், முனைவர் ராம.குருநாதன், ப.குணசேகர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், சு.ஜோதிர்லதா கிரிஜா, ஜெ.ராம்கி என்கிற ராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத் ஆகிய 10 பேருக்கும், 2019-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது சே.ராஜாராமனுக்கும், உலகத் தமிழ்ச் சங்க விருதுகளாக 2020-ம் ஆண்டிற்கான இலக்கிய விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த அலெக்சிசு தேவராசு சேன்மார்க்குக்கும், இலக்கண விருது இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் அருணாசலம் சண்முகதாசுக்கும், மொழியியல் விருது சிங்கப்பூரைச் சேர்ந்த சுப.திண்ணப்பனுக்கும் வழங்கப்படுகின்றன.

2020-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் ஜெ.வா.கருப்புசாமி (சென்னை), வேணு புருஷோத்தமன் (திருவள்ளூர்) , சு. சதாசிவம் (காஞ்சீபுரம்) , சே.அக்பர் கவுஸர் (வேலூர்) , மா.முருககுமரன் (கிருஷ்ணகிரி) , ரா.வெங்கடேசன் (திருவண்ணாமலை) , பரிக்கல் ந.சந்திரன் (விழுப்புரம்) , ஜா.ராஜா (கடலூர்) , அ.செந்தில்குமார் என்கிற தமிழ்க்குமரன் (பெரம்பலூர்) , சா.சிற்றரசு (அரியலூர்) , பொன்.சந்திரன் (சேலம்) , பெரு.முல்லையரசு (தர்மபுரி) , ப.முத்துசாமி (நாமக்கல்) , கா.செங்கோட்டையன் (ஈரோடு), சி.கார்த்திகா (கரூர்) , எம்.ஜி.அன்வர் பாட்சா (கோவை) ,

துரை அங்குசாமி (திருப்பூர்) , ம.பிரபு (நீலகிரி) , சோமவீரப்பன் (திருச்சி) , ஜீ.வெங்கட்ராமன் (புதுக்கோட்டை) , ரா.சேதுராமன் (சிவகங்கை) , பழ.மாறவர்மன் (தஞ்சை) , ராம.வேல்முருகன் (திருவாரூர்) , மா.கோபால்சாமி (நாகை) , ஆ.முனியராஜ் (ராமநாதபுரம்) , போ.சத்தியமூர்த்தி (மதுரை) , தா.தியாகராசன் (திண்டுக்கல்) , த.கருணைச்சாமி (தேனி) , சு.ராமச்சந்திரன் (விருதுநகர்) , வீ.செந்தில் நாயகம் (நெல்லை) , ச.காமராசு (தூத்துக்குடி) , பா.லாசர் (கன்னியாகுமரி) , ச.சரவணன் (திருப்பத்தூர்) , நந்திவரம் பா.சம்பத் குமார் (செங்கல்பட்டு) , பனப்பாக்கம் கே.சுகுமார் (ராணிப்பேட்டை) , மு.நாராயணன் (தென்காசி) , சி.உதியன் (கள்ளக்குறிச்சி) , துரை குணசேகரன் (மயிலாடுதுறை) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளன. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக ரூ.1 லட்சமும், தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு ரூ.5 லட்சமும், தமிழ்ச் செம்மல் விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், விருதுக்கான தகுதியுரை வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story