சென்னையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை


சென்னையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Feb 2021 8:45 PM GMT (Updated: 11 Feb 2021 8:45 PM GMT)

சென்னையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மற்றும் டெங்கு முதலான தொற்று நோய்கள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்துக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் எஸ்.திவ்யதர்ஷினி முன்னிலை வகித்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை முதலான பணியாளர்கள் அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் குறைந்தபட்சம் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘ஹாட்ஸ்பாட்’ பகுதி

சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அதிகாரிகள் மூலம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை முன்களப் பணியாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவு இருப்பு வைத்து முன்களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கொசுப்புழு தடுப்பு பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து அழித்தல், மேல்நிலைத் தொட்டி மூடிய நிலையில் உள்ளனவா? என ஆய்வு செய்தல் போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டுகளில் டெங்கு பாதித்த பகுதிகளை ‘ஹாட்ஸ்பாட்’ பகுதியாக கருதி அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும். மேலும், நீரினால் பரவும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த குடிநீரில் குளோரின் அளவை சரிபார்த்தல், குடிசைப் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கூட்டுப் பணியாக சுத்தம் செய்தல் போன்ற பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாநகர நல அதிகாரி டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அதிகாரி டாக்டர் ஹேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story