ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை: காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் கே.எஸ்.அழகிரி அழைப்பு


ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை: காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் கே.எஸ்.அழகிரி அழைப்பு
x
தினத்தந்தி 17 Feb 2021 4:17 AM GMT (Updated: 17 Feb 2021 4:17 AM GMT)

ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை: காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் கே.எஸ்.அழகிரி அழைப்பு.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்டை மாநிலமான புதுச்சேரியில், நாளை (இன்று) மாலை 3 மணியளவில் ரோடியர் மில் மைதானத்தில் நடைபெறுகிற மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றுகிறார். தமிழகமும், புதுச்சேரியும் வெவ்வேறு மாநிலங்களாக இருந்தாலும், இரண்டு மாநிலங்களையும் பிரித்து பார்க்க முடியாத வகையில் மக்களின் வாழ்க்கை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாகும்.

மத்திய பா.ஜ.க.வின் அடக்குமுறையினாலும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளினாலும் கடுமையான எதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிற புதுச்சேரி மாநிலத்திற்கு ராகுல்காந்தி வருவது அங்கே மிகப்பெரிய எழுச்சியையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி புதுச்சேரிக்கு வந்து பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத செயல்களை தோலுரித்துக் காட்ட இருக்கிறார்.

எனவே, புதுச்சேரியில் நடைபெறுகிற ராகுல்காந்தியின் பொதுக் கூட்டத்திற்கு, அண்டை மாவட்டங்களாக இருக்கிற கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 


Next Story