தமிழகத்தில் 15-வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவு


தமிழகத்தில் 15-வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவு
x
தினத்தந்தி 19 Feb 2021 12:45 AM GMT (Updated: 19 Feb 2021 12:45 AM GMT)

தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாகவே உள்ளது.

புதிதாக தொற்று
தமிழகத்தில் கடந்த 4-ந்தேதி முதல் கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைய தொடங்கியது. அந்த வகையில் நேற்று 15-வது நாளாக கொரோனா பாதிப்பு 500-க்கும் குறைவாக இருந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 944 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 269 ஆண்கள், 188 பெண்கள் என மொத்தம் 457 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 138 பேரும், செங்கல்பட்டில் 48 பேரும், கோவையில் 40 பேரும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரத்தில் தலா இருவரும், தேனியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூரில் நேற்று புதிதாக பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 37 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 108 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 66 லட்சத்து 52 ஆயிரத்து 934 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

6 பேர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் இருவரும் என 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அந்த வகையில் சென்னையில் 4 பேரும், திருவள்ளூர், திருச்சியில் தலா ஒருவர் என 3 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12,444 பேர் உயிரிழந்துள்ளனர்.

470 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனா பாதிப்பில் இருந்து 470 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். தற்போது தமிழகத்தில் சிகிச்சையில் 4 ஆயிரத்து 173 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story