கடந்த 5 நாட்களில் 2 ஆயிரத்து 376 பேருக்கு கொரோனா தொற்று


கடந்த 5 நாட்களில் 2 ஆயிரத்து 376 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 March 2021 2:59 AM GMT (Updated: 1 March 2021 2:59 AM GMT)

தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 2,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 282 ஆண்கள், 197 பெண்கள் என மொத்தம் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 182 பேரும், செங்கல்பட்டு 46 பேரும், கோவையில் 40 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தர்மபுரி, நாமக்கல், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, விருதுநகரில் தலா இருவரும், கரூர், ராமநாதபுரம், திருப்பத்தூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 29 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 105 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 71 லட்சத்து 63 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 376 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

3 பேர் உயிரிழப்பு

கடந்த ஜனவரி 8-ந்தேதி முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2,734 பேரில் 2 ஆயிரத்து 231 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் இருவரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் என 3 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அந்தவகையில் சென்னை, கரூர், கடலூரில் தலா ஒருவரும் என 3 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12,496 பேர் உயிரிழந்துள்ளனர்.

490 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 490 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 179 பேரும், செங்கல்பட்டு 51 பேரும், கோவையில் 47 பேரும் அடங்குவர்.

இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 24 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது தமிழகத்தில் 4 ஆயிரத்து 22 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story