முதல்-அமைச்சர் பற்றி இழிவான பேச்சு: தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது வழக்குப்பதிவு போலீசார் நடவடிக்கை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி இழிவாக பேசியதாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி இழிவாக பேசியதாக புகார் எழுந்தது. அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.
அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் பிரிவு இணை செயலாளர் திருமாறன், தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனு உரிய நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த புகார் மனு அடிப்படையில் ஆ.ராசா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆ.ராசா, சட்டப்படி இந்த வழக்கை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story