சுங்க இலாகாவின் ‘நீலக் கழுகு’ நடவடிக்கையில் ரூ.50 லட்சம் பறிமுதல் வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்தது
சுங்க இலாகாவின் ‘நீலக் கழுகு’ நடவடிக்கையில் ரூ.50 லட்சம் பறிமுதல் வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்தது.
சென்னை,
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தும் வகையில், வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் வினியோகிக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்படுகிறது. மறுபுறம் வருமானவரி சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம், பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க சென்னை மண்டல சுங்க இலாகா, ‘நீலக் கழுகு’ நடவடிக்கை என்ற பெயரில் நேற்று திடீர் சோதனைகளை நடத்தியது. விமான நிலைய, துறைமுக சரக்ககப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அதில், இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் புத்தம் புதிய நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
அதேபோல, மயிலாப்பூர் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றினர். இவையும் வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்ததாக கருதப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட ரூ.50 லட்சம் பணம், ரூ.25 லட்சம் வெள்ளிப்பொருட்கள், மேல் விசாரணைக்காக வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story