கொரோனா பரவல் எதிரொலியால் பயணிகள் வரத்து குறைவு மாநகர், புறநகரில் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படுகிறது


கொரோனா பரவல் எதிரொலியால் பயணிகள் வரத்து குறைவு மாநகர், புறநகரில் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 8 April 2021 2:03 AM GMT (Updated: 8 April 2021 2:03 AM GMT)

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேவைக்கு ஏற்ப மட்டும் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சென்னையில் உள்ள சுமார் 3 ஆயிரத்து 929 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் உள்ள 578 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 828 பஸ்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் சராசரியாக 3 ஆயிரத்து 233 நடைகள் மூலம் தினசரி 31 லட்சம் பயணிகள் கையாளப்பட்டு வருகின்றனர். இந்த பஸ்கள், சென்னையில் உள்ள 33 பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது.

இதில் ஒரு பணிமனையில் இருந்து சராசரியாக 120 பஸ்கள் வீதம் பல்வேறு வழித்தடங்களுக்கு சென்று வருகின்றன. பாரிமுனை, கோயம்பேடு, மாதவரத்தில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களை மையமாக வைத்து இந்த பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. பஸ்கள் தினசரி காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயங்கி வந்தன.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் கடந்த ஆண்டுகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் இருந்து முழுமையான அளவில் பஸ்கள் இயக்கப்படாத நிலை இருந்து வருகிறது. புறநகர் பகுதிகளுக்கு இரவு நேரங்களில் பஸ்கள் சேவை குறைக்கப்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

35 லட்சம் பேர்

கொரோனாவுக்கு முன்பு வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டதன் மூலம் 35 லட்சம் பயணிகள் கையாளப்பட்டு வந்தனர். கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்து தொடங்கிய நிலையில் முதலில் 1,800 பஸ்கள் மூலம் 16 லட்சம் பயணிகள் கையாளப்பட்டனர்.

தொடர்ந்து படிப்படியாக பயணிகள் தேவை அதிகரித்ததால் 2 ஆயிரத்து 750 பஸ்கள் மூலம் 22 லட்சம் பயணிகள் கையாளப்பட்டனர். தற்போது கல்லூரிகள் மூடப்பட்டதால் மீண்டும் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் காலையில் 1,800 பஸ்களும், மாலை வேளையில் 2 ஆயிரம் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

பயணிகள் வரத்து குறைவு

தற்போது மீண்டும் கொரோனா பரவுவதாக வந்த தகவலின் அடிப்படையில் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு அளித்து வருகிறோம். நோய் பரவல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் எந்தப்பகுதியில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதற்கு எவ்வளவு பஸ்கள் கூடுதலாக தேவைப்படும், புறநகர் பகுதிகளில் இரவு நேர பஸ்கள் இயக்கப்படாதது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பஸ்களின் தேவை எவ்வளவு என்பதையும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் தயாராக இருக்கிறோம். அதேநேரம் பயணிகள் குறைவாக உள்ள பகுதிகளில் பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story