முழு ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் கடைகள் அடைப்பு, சாலைகள் மூடப்பட்டன


முழு ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் கடைகள் அடைப்பு, சாலைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 2 May 2021 9:03 PM GMT (Updated: 2 May 2021 9:03 PM GMT)

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் மூடப்பட்டன. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. சாலைகளில் தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் பிடியில் சிக்குவோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய சேவை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகன நடமாட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

வெறிச்சோடிய சாலைகள்

தலைநகர் சென்னையில் நேற்று முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி சென்னையில் நேற்று அனைத்து சாலைகளும் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

குறிப்பாக அண்ணா சாலை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, டைடல் பார்க் சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, மெரினா காமராஜர் சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, கிண்டி சர்தார் படேல் சாலை, அடையாறு எல்.பி. சாலை, ராஜாஜி சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் மூடப்பட்டன. மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.

கடைகள் அடைப்பு

அதேபோல மாநகரில் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால் தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர் உள்பட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. தியாகராயநகர் ரங்கநாதன் தெரு நேற்று ஆள் அரவமின்றி வெறிச்சோடியது. மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. போக்குவரத்து முடக்கப்பட்டதின் காரணமாக பஸ்கள் இயங்கவில்லை.

டாஸ்மாக் கடைகள், மால்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் அனைத்துமே மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பாலகங்கள் வழக்கம்போல இயங்கின.

போலீசார் அபராதம் வசூல்

சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் சாலையில் சுற்றியோரை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் வைத்திருந்தோர் மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோரை போலீசார் அனுமதித்தனர். மேலும் வாகனங்களிலும் போலீசார் ரோந்து சென்று சாலைகளில் தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாக நிற்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதேபோல மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சென்னையின் நகர்ப்புறங்கள் போலவே புறநகர் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story