ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை குணப்படுத்துமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்; டாக்டர் ராமதாஸ் அறிக்கை


ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை குணப்படுத்துமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்; டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 16 May 2021 4:38 PM GMT (Updated: 16 May 2021 4:38 PM GMT)

ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை குணப்படுத்துமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரெம்டெசிவிர் மருந்து

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக காத்துக் கிடக்கும் மக்களைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. உணவு, தண்ணீர் இன்றி பல மணி நேரம் காத்திருந்தாலும் கூட மருந்து கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி, கட்டுப்பாடுகள் இல்லாமல் மக்கள் அதிகம் கூடுவதால் அங்கு கொரோனா பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் வாங்குவதற்காக குவிந்துள்ள அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். அவர்களில் பலருக்கு அறிகுறிகள் இல்லாமல் கூட கொரோனா தொற்று இருக்கலாம். ரெம்டெசிவிர் விற்பனைக்கு மாற்று வழிகளை ஆராயாமல், ஒரே இடத்தில் இவ்வளவு கூட்டத்தைக் கூட்டி, கொரோனா பரவுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது ஏன்? என்பது தான் புரியவில்லை.

தெளிவுபடுத்த வேண்டும்

ரெம்டெசிவிர் விற்பனை தொடர்பான விஷயங்களை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். முதலாவது ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு ஏன் வழங்கப்பட வேண்டுமா? என்பது பற்றியது. ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை குணப்படுத்தாது; ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து அல்ல; கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமடைவதை ரெம்டெசிவிர் தடுக்காது என்பது தான் மருத்துவ வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

உலகம் முழுவதும் 30 நாடுகளில் உள்ள 500 மருத்துவமனைகளில் 12,000 கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை செலுத்தி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட வேண்டுமா? அவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்றால் எந்த நிலையில் உள்ளவர்களுக்கு செலுத்த வேண்டும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நடவடிக்கை

ரெம்டெசிவிர் விற்பனைக்கான முறையை அரசு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீட்டை இப்போதுள்ள 7 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்திப் பெற வேண்டும். எந்தெந்த நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் தேவையோ, அந்தந்த நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை வழியாகவே மருந்தை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story