ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘தி பேமிலி மேன்-2’ தொடரை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் மத்திய மந்திரிக்கு தமிழக அரசு கடிதம்


ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘தி பேமிலி மேன்-2’ தொடரை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் மத்திய மந்திரிக்கு தமிழக அரசு கடிதம்
x
தினத்தந்தி 24 May 2021 8:10 PM GMT (Updated: 24 May 2021 8:10 PM GMT)

ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘தி பேமிலி மேன்-2’ தொடரை நாடு முழுவதிலும் தடை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘தி பேமிலி மேன்-2’ தொடரை நாடு முழுவதிலும் தடை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘தி பேமிலி மேன்-2’ தொடரை தடை செய்ய வலியுறுத்தி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய மந்திரிக்கு கடிதம்

ஈழத்தமிழர்களை தவறாகவும் மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய ‘தி பேமிலி மேன்-2’ என்ற கண்டனத்துக்குரிய இந்தித்தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மேற்கூறிய தொடரின் முன்னோட்டமானது இலங்கையில் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

நெடிய ஜனநாயக போராட்டக்களத்தில் அவர்களது தியாகங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அது எந்த வகையிலும் தமிழ் பண்பாட்டின் மதிப்புகளை கொண்டதாக இல்லை. பெருமைமிகு தமிழ் பண்பாட்டை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளை கொண்ட தொடரை எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளை கொண்டது என கருத முடியாது.

எதிர்ப்பு

எடுத்துக்காட்டாக, தமிழ் பேசும் நடிகையான சமந்தாவை பயங்கரவாதியாக காட்சிப்படுத்தி உள்ளது, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித்தாக்குதல் என்பதோடு, இதுபோன்ற உள்நோக்கமும் விஷமத்தனமுமான பரப்புரையை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது.

இந்த தொடரின் முன்னோட்டம் ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது, இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்காக பல ஆண்டுகளாக நமது உடன்பிறப்புகளான ஈழத்தமிழர்கள் போராடி வருகையில், அமேசான் பிரைம் போன்ற நிறுவனம் இதுபோன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும். மேற்கூறிய தொடரானது, ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழக தமிழர்களின் உணர்வுகளையும் பெருமளவில் புண்படுத்தியுள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினமாகும்.

நடவடிக்கை

இந்த சூழ்நிலையில், அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பப்படவுள்ள இந்த தொடரை, தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story