என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு: விடைத்தாளை எழுதி முடித்த ஒரு மணி நேரத்துக்குள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்


என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு: விடைத்தாளை எழுதி முடித்த ஒரு மணி நேரத்துக்குள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 2 Jun 2021 9:04 PM GMT (Updated: 2 Jun 2021 9:04 PM GMT)

என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வை எழுதி முடித்த ஒரு மணி நேரத்துக்குள் விடைத்தாளை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது உள்பட வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்தது. இந்த தேர்வுகளுக்கான முடிவு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அதில் சில பிரச்சினைகள் இருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து மறுதேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிட்டது.

இந்த நிலையில் அந்த மறுதேர்வு மற்றும் ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுகள் எவ்வாறு நடத்தப்படும்? என்பது குறித்தும் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியிடப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக வழிகாட்டு நடைமுறைகளை நேற்று வெளியிட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

ஹால் டிக்கெட்

* செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் அந்தந்த மாணவர்களுக்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மேலும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* மாணவர்கள் அவர்களுக்கான வினாத்தாளை சரியாக பெற்று இருக்கிறோமா என உறுதி செய்த பின்பு விடைத்தாளில் தேர்வு எழுத தொடங்க வேண்டும். அதேபோல் விடைத்தாளில் காலியான பக்கமாக எதையும் விடக்கூடாது. அப்படி அந்த பக்கம் இருக்குமானால் அதை பேனாவால் கோடிட வேண்டும்.

* விடைத்தாளில் நீல நிறம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனாவினால் மட்டுமே எழுதப்பட வேண்டும்.

பதிவேற்றம் செய்ய வேண்டும்

* விடைத்தாளில் தவறான பதிவு எண், பாட குறியீடு பதிவு செய்து இருந்தாலும், தேர்வுக்கு சம்பந்தம் இல்லாமல் வேறு ஏதாவது எழுதி இருந்தாலும் விடைத்தாள் நிராகரிக்கப்படும்.

* வீட்டில் இருந்தபடி ஆப்லைன், பேனா-பேப்பர் முறையிலான தேர்வாக 3 மணி நேரம் நடக்கும். காலை, பிற்பகல் என இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெற இருக்கிறது. காலையில் நடைபெறும் தேர்வு 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். அதேபோல் பிற்பகலில் 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடக்கும்.

* தேர்வு எழுதி முடித்ததும், அதை பி.டி.எப். ஆக மாற்றி கல்லூரி நிர்வாகம் எதன் வழியாக பதிவேற்றம் செய்ய சொல்கிறதோ? அதில் தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் விடைத்தாளை அனுப்பினால் மட்டுமே மதிப்பீடுகளுக்கு பரிசீலிக்கப்படும்.

தபால், கூரியர் மூலம்...

* அதேபோல் தேர்வு எழுதிய விடைத்தாளை நூலால் கட்டி, அதற்கென ஒரு பிரத்தியேக கவரில் போட்டு விரைவு தபால், பதிவுத்தபால் அல்லது கூரியர் மூலமாக அந்தந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் பெயரில் அன்றைய தினமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். நேரடியாக கல்வி நிறுவனத்துக்கு சென்று விடைத்தாளை கொடுக்கக்கூடாது.

* தேர்வுக்கு தேவையான எழுது பொருட்கள் உள்பட அனைத்தையும் தயாராக மாணவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

வினாத்தாள்

* வினாத்தாளை அந்தந்த கல்வி நிறுவனம் மின்னஞ்சல், கூகுள் கிளாஸ்ரூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் மாணவர்களுக்கு தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு அனுப்பி வைக்கும்.

* 15 ஏ4 தாளுக்கு (30 பக்கம்) மிகாமல் மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு தாளின் மேல்புறத்தில் மாணவனின் பெயர், பாட குறியீடு, பாடத்தின் பெயர், பதிவு எண் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அதேபோல் ஒவ்வொரு தாளின் கீழ்ப்பக்கத்தில் தேர்வு தேதி, பக்கம் எண், கையொப்பம் ஆகியவற்றையும் மாணவர்கள் பதிவிட வேண்டும்.

* இது தொடர்பான மேலும் தகவல்கள் விளக்கங்களுக்கு அந்தந்த கல்லூரி நிர்வாகத்தை மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story