மேட்டூர் அணையை 12-ந் தேதி திறக்கிறார்: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் திருவாரூரில் 13-ந் தேதி ஆய்வு


மேட்டூர் அணையை 12-ந் தேதி திறக்கிறார்: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் திருவாரூரில் 13-ந் தேதி ஆய்வு
x
தினத்தந்தி 8 Jun 2021 7:00 PM GMT (Updated: 8 Jun 2021 7:00 PM GMT)

மேட்டூர் அணையை 12-ந் தேதி திறந்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 13-ந் தேதி திருவாரூர் மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்ற நிலையில் கொரோனா பரவல் அதிகரித்தபடி இருந்தது. இதை குறைப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினார்.

அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். மற்ற துறைகள் மீதான கவனத்தை குறைத்துக்கொண்டு சுகாதாரத்துறையில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

பணியாளர்களுக்கு ஊக்கம்

அதுமட்டுமல்லாமல், கொரோனா அதிகம் பரவியிருந்த கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அதிகாரிகளை அழைத்து பேசி, கொரோனா தடுப்பு பணிகளை ஊக்கப்படுத்தினார்.

கோவையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு கவச உடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று, நோயாளிகளை சந்தித்து பேசியதோடு, மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு ஊக்கமளித்தார்.

நேரில் சென்று....

மேலும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கும் நேரில் சென்று சிகிச்சை முறைகளை பார்வையிட்டார்.

அந்த வகையில் கொரோனா பரவலின் வேகத்திற்கு ஏற்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வேகமாக செயல்பட்டு வருகிறார். போன் மூலமாகவோ, காணொலி காட்சி மூலமாகவோ உத்தரவு போட்டுக்கொண்டிராமல், நேரடியாக களத்திற்கே சென்று பணிகளை கவனித்து வருகிறார்.

தற்போது அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவினால், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

மேட்டூர் அணை திறப்பு

டெல்டா பாசனத்திற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை 12-ந் தேதி திறந்து வைக்கிறார்.

இதற்காக 12-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சேலத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் அணைக்கு சென்று அணையை திறந்து வைக்கிறார்.

சேலம், திருவாரூர்

அங்கிருந்து அவர் சேலம் செல்கிறார். அங்குள்ள இரும்பு ஆலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக ஆஸ்பத்திரியை அவர் பார்வையிடுகிறார்.

பின்னர் சேலத்தில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். திருச்சியில் இருந்து நாகைக்கும், பின்னர் நாகையில் இருந்து திருவாரூருக்கும் அவர் செல்கிறார். 12-ந் தேதி இரவு திருவாரூரில் தங்குகிறார்.

கொரோனா பணி ஆய்வு

மறுநாள் 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை திருக்குவளையில் அவரது தந்தையும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி வாழ்ந்த வீட்டுக்கு செல்கிறார். அங்குள்ள கருணாநிதியின் படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் அவரது தாத்தா, பாட்டியின் நினைவிடங்களுக்கும் சென்று மரியாதை செலுத்துகிறார்.

அதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.

Next Story