பாதிப்பு குறைவு, உயிரிழப்பு அதிகம்: தமிழகத்தில் 18,023 பேருக்கு கொரோனா


பாதிப்பு குறைவு, உயிரிழப்பு அதிகம்: தமிழகத்தில் 18,023 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Jun 2021 10:59 PM GMT (Updated: 8 Jun 2021 10:59 PM GMT)

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறைவாகவும், உயிரிழப்பு அதிகமாகவும் இருந்தது. ஒரே நாளில் 18,023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிகை நேற்று முன்தினத்தை விட அதிகமாகவும் இருந்தது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9,992 ஆண்கள், 8,031 பெண்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 23 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஒருவரும், 12 வயதுக்கு உட்பட்ட 702 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,870 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

409 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 2,439 பேரும், சென்னையில் 1,437 பேரும், ஈரோட்டில் 1,596 பேரும், திருப்பூரில் 995 பேரும், சேலத்தில் 975 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 115 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 83 லட்சத்து 48 ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 13 லட்சத்து 34 ஆயிரத்து 635 ஆண்களும், 9 லட்சத்து 40 ஆயிரத்து 31 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 22 லட்சத்து 74 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 81 ஆயிரத்து 965 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 26 ஆயிரத்து 113 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 259 பேரும், தனியார் மருத்துவமனையில் 150 பேரும் என 409 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

கோவையில் 44 பேர் பலி

அந்தவகையில் அதிகபட்சமாக கோவையில் 44 பேரும், சென்னையில் 42 பேரும், சேலத்தில் 25 பேரும், திருவள்ளூர், திண்டுக்கலில் தலா 22 பேரும், திருப்பூர், திருச்சியில் தலா 18 பேரும், தேனி, கன்னியாகுமரி, செங்கல்பட்டில் தலா 16 பேரும், தஞ்சாவூரில் 13 பேரும், வேலூர், பெரம்பலூரில் தலா 11 பேரும், அரியலூர், தென்காசியில் தலா 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் தூத்துக்குடியில் 9 பேரும், கடலூர், விழுப்புரத்தில் தலா 8 பேரும், திருவாரூர், ராணிப்பேட்டை, மதுரையில் தலா 7 பேரும், தருமபுரி, காஞ்சீபுரம், கரூரில் தலா 6 பேரும், விருதுநகர், நெல்லை, திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோட்டில் தலா 5 பேரும், புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சியில் தலா 4 பேரும், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருப்பத்தூரில் தலா 3 பேரும், சிவகங்கையில் ஒருவரும் என நேற்று அனைத்து மாவட்டங்களிலும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

31,045 பேர் ‘டிஸ்சார்ஜ்’

உயிரிழந்தவர்களில் 107 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 27 ஆயிரத்து 765 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 31,045 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 20 லட்சத்து 28 ஆயிரத்து 344 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 595 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story