தமிழகத்தில் வரும் ஜூலை 5ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் வருகிற ஜூலை 5ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24ந்தேதியில் இருந்து 31ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு படிப்படியாக ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் தொற்று பரவல் நன்றாக குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 28ந்தேதி முடிகிறது.
இந்த நிலையில் 6வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் இன்று தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வருகிற ஜூலை 5ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story