குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு காவிரியில் 40 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்


குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு காவிரியில் 40 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்
x
தினத்தந்தி 26 Jun 2021 12:14 AM GMT (Updated: 26 Jun 2021 12:14 AM GMT)

குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

சென்னை,

காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் 12-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹெல்டார் தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி மூலம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், அரசின் சிறப்பு செயலாளர் அசோகன், தலைமைப்பொறியாளர் கே.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கர்நாடகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ், கேரளா சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பி.கே.ஜோஷ், புதுச்சேரி சார்பில் நீர்வளத்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறுவை சாகுபடிக்கு தண்ணீர்

கூட்டத்தில், தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி. தண்ணீரும் என மொத்தம் 40.43 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகம் கேட்ட இந்த தண்ணீரை சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி முறைப்படி வழங்க வேண்டும் என கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவிட்டது.

மேகதாது பிரச்சினை

முன்னதாக, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடகம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய தமிழக பிரதிநிதிகள், இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மேகதாது பற்றி கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர் இதை ஏற்றுக்கொண்ட ஆணையம், மேகதாது அணை விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் ஒத்திவைத்தது.

இதைப்போல, சேலம் சரபங்கா நீரேற்றும் திட்டம், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் ஆகியவை குறித்து பின்னர் விவாதிக்கலாம் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த தகவல்கள் அனைத்தும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுப்பட்டு உள்ளது.

Next Story