மேட்டூர் அணையின் நீர்வரத்து 836 கன அடியாக குறைந்தது


மேட்டூர் அணையின் நீர்வரத்து 836 கன அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 3 July 2021 4:01 AM GMT (Updated: 3 July 2021 4:01 AM GMT)

மேட்டூர் அணையில் நீர்வரத்து 1,101 கன அடியில் இருந்து இன்று காலை 836 கன அடியாக குறைந்துள்ளது.

சேலம்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்சமயம் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணை நீர்மட்டம் 83.29 அடியிலிருந்து 82.09 அடியாக சரிந்தது.

நேற்று நீர்வரத்து 1,101 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 836 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 44.07 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

Next Story