பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2021 8:14 PM GMT (Updated: 13 Aug 2021 8:14 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவருடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததுடன், அதை காட்டி அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது. இந்த கும்பலிடம் சிக்கிய ஒரு மாணவி ஒருவர் கதறி அழும் வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முதலில் சி.பி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. நகர மாணவரணி முன்னாள் செயலாளர் அருளானந்தம், பைக்பாபு, ஹெரோன்பால் ஆகிய 3 பேரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனிடையே சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கோவை கோர்ட்டிற்கு உத்தரவிட்டார்.

மேலும் ஒருவர் கைது

இந்த நிலையில் சி.பி.ஐ. போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சியை அடுத்த கிட்டசூரம்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 29) என்பவரை கைது செய்தனர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சதீஷின் நண்பர் என்றும், இவர்கள் இருவரும் சேர்ந்து துணிக்கடை நடத்தியதும் தெரியவந்தது.

கைதான அருண்குமார் கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அருண்குமார் சேலத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ் உள்பட 3 பேர் கைது ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கையும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story