‘ஒற்றுமையாக இருந்து நெருக்கடிகளை வெல்வோம்' தெய்வீக கைங்கர்ய பேரவை கூட்டத்தில் ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு


‘ஒற்றுமையாக இருந்து நெருக்கடிகளை வெல்வோம் தெய்வீக கைங்கர்ய பேரவை கூட்டத்தில் ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு
x
தினத்தந்தி 29 Aug 2021 8:06 PM GMT (Updated: 29 Aug 2021 8:06 PM GMT)

கோவில் பணியாளர்கள் ஒற்றுமையாக இருந்து நெருக்கடிகளை வெல்வோம் என்று திருச்சியில் நடந்த ‘தெய்வீக கைங்கர்ய பேரவை’ கூட்டத்தில் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசினார்.

சென்னை,

தமிழக கோவில்களில் உள்துறை பணியாளர்கள், தெய்வீக பணிகளில் ஈடுபட்டிருக்கும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பிரபந்தம் வாசிப்பவர்கள், பரம்பரை அறங்காவலர்கள் இசைக்கலைஞர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜியின் தலைமையில், ‘தெய்வீக கைங்கர்ய பேரவை’ என்ற அமைப்பின் கீழ் ஒன்றாக இணைந்துள்ளனர்.

‘தெய்வீக கைங்கர்ய பேரவை’யின் முதலாவது ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமை தாங்கினார். மயிலாடுதுறை சிவபுரம் வேதாகமபாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார்.

ஒற்றுமையாக இருந்து...

கூட்டத்தில், ஆர்ஆர்.கோபால்ஜி பேசியதாவது:-

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றபிறகு அறநிலையத்துறை சார்ந்த கோவில்களில் பாரம்பரியமாக கைங்கர்யம் செய்து வருபவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் தரப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதல்-அமைச்சர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது இந்து சமய வழிபாட்டு முறைகளில் தலையிடமாட்டோம்’’ என்று கூறியிருந்தார். ஆனால், செயல்பாடு மாறுபாடாக இருக்கிறது.

தமிழக அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளை, கோவில்களில் பணியாற்றும் உள்துறை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மட்டுமே சவால்களை சந்தித்து, தங்கள் குறிக்கோளில் வெற்றி காணமுடியும். ஒரே நோக்கமிருந்தும் பல்வேறு சங்கங்களாகவும், அமைப்புகளாகவும் செயல்படும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் இந்த தெய்வீக கைங்கர்ய பேரவை ஏற்படுத்தப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் கோவில் பணியாளர்கள், தங்களுக்குள் பேதம் பார்க்காமல், ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து ஏற்படும் நெருக்கடிகளையும், சவால்களையும் சந்தித்து வெற்றிபெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்.ஆர்.கோபால்ஜிதலைவராக தேர்வு

கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் பணியாற்றும் 26-க்கும் மேற்பட்ட உள்துறை பணியாளர் சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டனர்.

‘தெய்வீக கைங்கர்ய பேரவை’ அமைப்பின் தலைவராக ஆர்.ஆர்.கோபால்ஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதோடு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான பூரண அதிகாரத்தை அவருக்கு அளிப்பது, மரபுகள் மாறாமல் கோவில்களில் ஆன்மிக பணிகள் நடைபெற ஆவன செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story