உணவில் விஷம் வைத்து கணவர் படுகொலை கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடி கைது


உணவில் விஷம் வைத்து கணவர் படுகொலை கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடி கைது
x
தினத்தந்தி 10 Sep 2021 10:26 PM GMT (Updated: 10 Sep 2021 10:26 PM GMT)

சென்னை சூளைமேட்டில் உணவில் விஷம் வைத்து கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை சூளைமேடு, கண்ணகி தெருவைச்சேர்ந்தவர் செல்வம் (வயது 40). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். செல்வம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவ்வப்போது செல்வம்-விஜயலட்சுமி குடும்ப வாழ்க்கையில் புயல் வீசி அடங்கும்.

இந்த நிலையில்தான் விஜயலட்சுமி கள்ளக்காதலில் சிக்கினார். மோகன் என்ற முண்டக்கண்ணு மோகன் (54) என்பவருடன் விஜயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த விஷயம் வெளியில் தெரிந்து, செல்வம் மனைவி விஜயலட்சுமியை கண்டித்தார். கள்ளக்காதலுக்கு குறுக்கே நின்ற கணவரை தீர்த்துக்கட்ட, விஜயலட்சுமி முடிவு செய்தார்.

உணவில் விஷம்

உணவில் பூச்சி மருந்து விஷம் கலந்து கொடுத்து, செல்வத்தை கொலை செய்ய கள்ளக்காதலன் மோகன், விஜயலட்சுமிக்கு திட்டம் வகுத்து கொடுத்தார். கடந்த 2-ந்தேதி அன்று செல்வம் சாப்பிட்ட கஞ்சியில் பூச்சி மருந்து விஷத்தை கலந்து விஜயலட்சுமி சாப்பிட கொடுத்ததாக தெரிகிறது. கஞ்சியை சாப்பிட்ட செல்வம் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 6-ந்தேதி அன்று பரிதாபமாக இறந்து போனார். தனது கணவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், மயங்கி விழுந்து இறந்து விட்டதாக விஜயலட்சுமி அழுதுபுரண்டு நாடகமாடினார்.

ஆனால் செல்வம் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர் ஒருவர் சூளைமேடு போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் பகலவன் ஆகியோர் மேற்பார்வையில் சூளைமேடு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

வெளிச்சத்துக்கு வந்த கொலை - கைது

செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், செல்வம் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் செல்வம் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது, வெட்ட வெளிச்சமானது. தனது குட்டு வெளிப்பட்டதால், குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு, விட்டு விஜயலட்சுமி தனது காதலன் மோகனுடன் தலைமறைவாகி விட்டார்.

இது போலீசாருக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது. நேற்று முன்தினம் விஜயலட்சுமி, அவரது கள்ளக்காதலன் மோகனுடன் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் விஜயலட்சுமி உண்மையை ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான மோகன் கொடூர குற்றவாளி ஆவார். அவர் மீது 7 கொலை வழக்குகள் மற்றும் 4 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியைச் சேர்ந்த அவர், சென்னை நெற்குன்றம் மல்லிகை அவென்யூவில் வசித்தார்.

சிறையில் அடைப்பு

விஜயலட்சுமி மீதும், அவரது காதலன் மோகன் மீதும் சூளைமேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த படுகொலை சம்பவம் சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Next Story