இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும்


இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும்
x
தினத்தந்தி 15 Sep 2021 10:12 PM GMT (Updated: 15 Sep 2021 10:12 PM GMT)

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வீழ்த்தப்பட்டுக் கிடந்த வன்னியர் சமுதாயத்திற்கு சமூக நீதியை வென்றெடுத்துக் கொடுப்பதற்காக நடத்தப்பட்ட உரிமைப் போராட்டத்தில் 21 பேர் துப்பாக்கிகளால் சுடப்பட்டும், கொடூரமாக தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டு வரும் 17-ந் தேதியுடன் (நாளை) 24 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.

வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசுக்கு உணர்த்துவதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லாத நிலையில்தான் 1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாளில் ஒருவார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினோம். காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூடு, அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய கொடியத் தாக்குதல்களில் பாட்டாளி சொந்தங்கள் 21 பேர் தங்களின் இன்னுயிரை ஈந்தனர்.

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் கனவாக இருந்த இந்த விஷயங்கள் இப்போது நனவாகியுள்ளன. கடந்த ஆண்டில் வேதனையுடன் பேசிய பல விஷயங்களை இப்போது மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

இந்த இலக்கை எட்டவேண்டும் என்பதற்கான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நமது தியாகிகளுக்கு சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ந்தேதி அனைவரும் அவர்களின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் அஞ்சலி செலுத்தி அவர்களை நினைவு கூறவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story