உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் அண்ணாமலை நம்பிக்கை


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் அண்ணாமலை நம்பிக்கை
x
தினத்தந்தி 17 Sep 2021 8:09 PM GMT (Updated: 17 Sep 2021 8:09 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடியின் 71- வது பிறந்தநாளையொட்டி தமிழக பா.ஜ.க. தொழில் பிரிவு சார்பில் சென்னை கமலாலயத்தில் ‘75 அங்குல அளவிலான தொடுதிரை டிஜிட்டல் டி.வி.’ நிறுவப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் எம்.என்.ராஜா, அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகம், பொதுசெயலாளர் கரு.நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சமூகநீதி காவலர் மோடி

விழாவில் தொடுதிரை டிஜிட்டல் டி.வி.யின் செயல்பாட்டை கே.அண்ணாமலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த டிஜிட்டல் டி.வி. மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் (பன்கி பாத்) கலந்துரையாடலை கேட்டு அவரிடம் பேசவும் முடியும். சமூக நீதியை பிரதமர் நரேந்திர மோடி நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். எங்களுக்கு அவர்தான் சமூகநீதி காவலர்.

மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க.வுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். எனவே கூட்டணியில் விட்டு கொடுத்து செல்வோம். சுமூகமான முறையில் கூட்டணி இடபங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story