வங்கி காசோலையை தவறாக பயன்படுத்தி ரூ.10 கோடி மோசடி முயற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் அதிரடி கைது


வங்கி காசோலையை தவறாக பயன்படுத்தி ரூ.10 கோடி மோசடி முயற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 24 Sep 2021 10:00 PM GMT (Updated: 24 Sep 2021 10:00 PM GMT)

சென்னையில் வங்கி காசோலையை தவறாக பயன்படுத்தி ரூ.10 கோடி மோசடி முயற்சியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கி கிளைக்கு கடந்த புதன்கிழமை அன்று 2 பெண்கள் உள்பட 4 பேர் வந்து காசோலை ஒன்றை கொடுத்து மாற்ற முற்பட்டனர். அந்த காசோலை, டெல்லியில் செயல்படும் திலீப் பில்ட் கான் லிமிடெட் என்ற கம்பெனியில் இருந்து சென்னை எழும்பூரில் உள்ள ராம்சரண் அண்ட் கோ என்ற கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது. அந்த காசோலையில் உள்ள தொகை ரூ.9 கோடியே 99 லட்சத்து 91 ஆயிரம் ஆகும்.

தொகை பெரிதாக இருந்ததாலும், காசோலையை மாற்ற வந்தவர்களின் செயல்பாட்டில் சந்தேகம் எழுந்ததாலும், வங்கி மேலாளர், காசோலை பணத்தை மாற்றிக் கொடுக்காமல் வந்தவர்களை காத்திருக்க வைத்தார். ஆனால் வந்தவர்கள் பணத்தை உடனே மாற்றிக் கொடுக்கும்படி பதற்றத்துடன் பேசினார்கள்.

மேலும் காசோலையில் போடப்பட்டிருந்த கையெழுத்திலும் முரண்பாடுகள் இருந்தன. எனவே காசோலை கொடுத்த டெல்லி நிறுவனத்துக்கு குறிப்பிட்ட காசோலை நம்பரை அனுப்பி, வங்கியின் மேலாளர் ஆன்லைன் வாயிலாக விளக்கம் கேட்டார். உடனே டெல்லி கம்பெனியில் இருந்து பதில் வந்தது. குறிப்பிட்ட காசோலை 2018-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது என்றும், அதில் உள்ள ரூ.8,737 பணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது என்றும் பதிலில் தெரிவிக்கப்பட்டது.

போலீசில் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர், காசோலையை கொடுத்த 2 பெண்கள் உள்பட 4 பேரையும் பிடித்து கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலியான காசோலையை கொடுத்து ரூ.9 கோடியே 99 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ய முயற்சி செய்ததாக புகாரும் கொடுக்கப்பட்டது.

உடனடியாக கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசாரும் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், 16 பேர் கொண்ட மெகா மோசடி கும்பல் இந்த போலி காசோலையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. கேரளா, கோவை, தர்மபுரி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மற்றும் சென்னையைச் சேர்ந்த மோசடி கும்பல் நபர்கள், பல மாதங்களாக செயல்பட்டு, இந்த மெகா மோசடியை அரங்கேற்ற வியூகம் வகுத்துள்ளனர்.

தொண்டு நிறுவன பணம்

காசோலை கொடுக்கப்பட்ட சென்னை எழும்பூர் ராம்சரண் அண்ட் கோ நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. காசோலையில் உள்ள பணம் ஒரு வெளிநாட்டு தொண்டு நிறுவனத்திடம் இருந்து, சென்னையில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்துக்கு வழங்கப்பட்டது என்றும், அந்தப் பணத்தை மாற்றுவதற்கு உதவி செய்தால், மொத்த பணத்தில் ரூ.5 கோடியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பேரம் பேசி உள்ளனர். மீதி உள்ள ரூ.4 கோடியே 99 லட்சத்து 91 ஆயிரத்தை மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பங்கு போட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ரூ.5 கோடிக்கு ஆசைப்பட்டு தங்கள் நிறுவனம் பெயரில் காசோலையில் உள்ள பணத்தை மாற்ற ராம்சரண் நிறுவனத்தினர் ஒப்புக்கொண்டு மோசடிக்கு துணை போய் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு

கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் முருகனுக்கும் (வயது 55), அவரது நெருங்கிய தோழியான கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த சாவித்திரி (40) என்பவருக்கும் இந்த காசோலை மோசடியில் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் முருகன் 7 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, தனது தோழி சாவித்திரியுடன் சென்னைக்கு வந்து பண மோசடி முயற்சிக்கு உதவி செய்துள்ளார். அவர் தனது தோழியுடன் தியாகராயநகரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் ஒரே அறையில் தங்கி உள்ளார். இந்த மோசடி வெற்றி அடைந்தால் முருகனுக்கும், அவரது தோழிக்கும் ரூ.11 லட்சம் கிடைக்கும் என்று ஆசைகாட்டப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் அவரது தோழி உள்பட 9 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

பெயர் விவரம்

முருகன் மற்றும் அவரது தோழி சாவித்திரி தவிர கைதான இதர 7 பேர் பெயர் விவரம் வருமாறு:-

1.பிரசாத் மேத்யூ (45)-கேரள மாநிலம், கோழிக்கோடு. 2.அக்கீம் ராஜா (41)-திருச்சி. 3.விஜயகுமார் (42)-தர்மபுரி. 4.பானுமதி (44)-சென்னை விருகம்பாக்கம், ஏரிக்கரை. 5.செந்தில்குமார் (39) -திருவண்ணாமலை. 6. நாராயணன்(61)- சென்னை புரசைவாக்கம். 7.கோபிநாதன் (56)- மதுரை திருமங்கலம். இவர்கள் தவிர மேலும் 7 பேர் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகி விட்டனர்.

கைதானவர்களில் 7 பேர் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மோசடி பணத்தை பங்கு போட சென்னைக்கு வந்து தங்கி இருந்தனர். அவர்களை கூண்டோடு போலீசார் மடக்கிப் பிடித்துவிட்டனர். இந்த நூதன மெகா மோசடி முயற்சிக்கு, குறிப்பிட்ட வங்கி காசோலையை பயன்படுத்த ஏன் திட்டமிட்டனர், அந்த காசோலை அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாகி உள்ள 7 பேரை பிடித்தால்தான் இதற்கு விடை கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

Next Story