தமிழகத்தில் நாளை 3ஆவது மெகா தடுப்பூசி முகாம்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Sep 2021 4:14 AM GMT (Updated: 25 Sep 2021 4:14 AM GMT)

நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நாளை 3ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையடுத்து, அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளன. 

முன்னதாக இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் செப்.19ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் வருகிற (26-9-2021) ஞாயிற்றுக்கிழமை (நாளை) 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் மூன்றாவது மாபெரும் மூன்றாவது தடுப்பூசி முகாமை முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா ஒழிக்கும் வகையில் தங்கள் பங்கை செலுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் நாளை சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கும், செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 தடுப்பூசிகளும், 19-ந் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 931 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை (26-ந் தேதி) சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. அந்தவகையில் சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் http://chennaicorporation.gov.in/gcc/covid&details/megavacdet.jsp-என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story