வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Sep 2021 1:06 AM GMT (Updated: 27 Sep 2021 1:06 AM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

சென்னை, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை. வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு கொடுத்துள்ளார். இது தவிர பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் மூடப்படும். மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இயங்கும் என்றும் அமைதியான முறையில் பந்த் நடைபெறும் என்றும் ''சம்யுக்தா கிசான் மோர்ச்சா' விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தொழிற்சங்கங்கள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. பந்த் போராட்டத்தை விளக்கி தொழிற்சங்கங்கள் சார்பில் 3 நாள் பிரசாரமும் நடைபெற்றது. கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காங்கிரஸ்-திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகளை சந்தித்து பந்த் போராட்டத்துக்கு ஆதரவு கோரினர். அந்த கட்சிகளின் மாநில நிர்வாகிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ டெம்போ ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்தும் ஆதரவு திரட்டினர். 

Next Story