மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு குறைப்பு


மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 6 Oct 2021 9:59 AM GMT (Updated: 6 Oct 2021 9:59 AM GMT)

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சேலம்,

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழையின் காரணமாக, கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அந்த அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.04 அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 75.63 அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 12,308 கன அடியிலிருந்து 12,118 கன அடியாகக் குறைந்ததுள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியிலிருந்து ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 37.74 டி.எம்.சி.யாக உள்ளது.

Next Story