சென்னையில் ‘மத்திய சதுக்கம்’ கட்டுமானப் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


சென்னையில் ‘மத்திய சதுக்கம்’ கட்டுமானப் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 8 Oct 2021 10:35 AM GMT (Updated: 8 Oct 2021 10:56 AM GMT)

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சென்ட்ரல் பகுதியில் தடையற்ற போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் விதமாக ‘மத்திய சதுக்கம்’ அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி வாகன நிறுத்தம், பாதசாரிகளுக்கு முறையான நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பகுதி உருவாக்கப்படுகிறது. 389 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 தளங்களை கொண்ட இந்த திட்டத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் இதன் கட்டுமானப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது கட்டுமான திட்டம் குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் முதல்-அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து கிண்டிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர், ‘கத்திப்பாரா சதுக்கம்’ கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் 14 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம், பேருந்து நிறுத்தம் மற்றும் பூங்கா உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகிறது. ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களின் வசதிக்காக இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அனைத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கிண்டியில் இருந்து போரூர் சென்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின், போரூர் மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தார். மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட விரிவாக்க திட்டத்தின் கீழ் சென்னை களங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக போரூர்-பூந்தமல்லி இடையே சுமார் 8 கி.மீ. நீளத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் ஸ்டாலின், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Next Story