ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் திட்டம்: மெட்ரோ ரெயில் பணிகளை மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் திட்டம்: மெட்ரோ ரெயில் பணிகளை மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 9 Oct 2021 12:12 AM GMT (Updated: 9 Oct 2021 12:12 AM GMT)

ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடம் (45.8 கிலோ மீட்டர்), கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான வழித்தடம் (26.1 கிலோ மீட்டர்) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் (47 கிலோ மீட்டர்) என மொத்தம் 118.9 கிலோ மீட்டர் தொலைவிலான 3 வழித்தடங்களை ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் ரூ.389 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய சதுக்க திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க உத்தரவு

இந்த திட்டத்தின் கீழ் வெளியூர் ரெயில், புறநகர் ரெயில், பறக்கும் ரெயில், மெட்ரோ ரெயில், மாநகர போக்குவரத்து மற்றும் இதர பொது போக்குவரத்துகளை ஒருங்கிணைத்தல், பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே 2 சுரங்க நடைபாதைகள், நிலத்தடி வாகன நிறுத்தங்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டிடம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொதுக்கூடம், சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றிற்கிடையே உள்ள பகுதியை உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தும் பணிகள் குறித்த விவரங்களை மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மத்திய சதுக்கத்தினை சிங்கார சென்னையின் மணிமகுடமாக விளங்கும் வகையில், நேர்த்தியாக குறித்த காலத்தில் பணிகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

கத்திப்பாரா சதுக்கம்

பின்னர், கத்திப்பாரா நகர்ப்புற சதுக்க பகுதிக்கு சென்று, கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் பன்முக போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து, பயணிகள் ஒரு போக்குவரத்தில் இருந்து மற்றொரு போக்குவரத்திற்கு மாறிச் செல்வதற்கும், அப்பகுதியில் காத்திருக்கும் போது பயணிகளுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதன்பின்பு போரூர் ராமச்சந்திரா மருந்துவமனை எதிரில், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தெள்ளியகரம் மெட்ரோ நிலையத்தின் கட்டுமான பணிகளையும், அங்கு அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ நிலைய கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளுமாறும், கட்டுமானப் பணிகளின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story