டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு மின்சார வாரியத்தில் வேலை


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு மின்சார வாரியத்தில் வேலை
x
தினத்தந்தி 11 Oct 2021 11:54 PM GMT (Updated: 11 Oct 2021 11:54 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு மின்சார வாரியத்தில் வேலை பணி நியமன ஆணையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலப்புத்தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள் வெ.சுபா, எஸ்.தனலட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பெருமை சேர்த்த வீராங்கனைகள்

ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், உலகத் தரத்திலான பயிற்சி வழங்குதல், விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

மேலும், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்தல், வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கணைகளை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீராங்கணைகள் வெ.சுபா, எஸ்.தனலட்சுமி ஆகியோர் கடந்த 30.7.2021-ம் நாளன்று ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 4x400 மீட்டர் ‘கலப்பு தொடர் ஓட்டத்தில்’ பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இவ்விரு வீராங்கனைகளையும் கவுரவப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பணி நியமன ஆணை

இதற்கான நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நடந்தது. வீராங்கனைகள் இருவருக்கும் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story