ஊரக உள்ளாட்சி தேர்தல் :அதிக இடங்களில் தி.மு.க முன்னிலை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி தி.மு.க அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது.
சென்னை:
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
மொத்தம் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் உள்ள 27 ஆயிரம் பதவி இடங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் போட்டியின்றி ஏகமனதாக தேர்வானார்கள். மீதமுதள்ள 23,998 பதவி இடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 79,433 பேர் போட்டியிட்டனர். இதில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பு இல்லாமல் சுயேட்சை சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டனர். அந்த வகையில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள்.
இரண்டு கட்ட தேர்தலில் மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 14,573 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் மொத்தம் 41,500 வாக்கு பெட்டிகளில் இருந்தன.
இவை அனைத்தும் 74 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 31,245 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முதலில் வாக்குப்பெட்டிகளை வாக்கு எண்ணும் அரங்கத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் ஒரு பெரிய பெட்டியில் வாக்குச் சீட்டுகளை கொட்டினர்.
பின்னர் அவற்றை 50-50 கட்டுகளாக கட்டினார்கள். அதன் பிறகு இந்த ஓட்டுச்சீட்டு கட்டுகளை இன்னொரு அறைக்கு கொண்டு சென்று அவற்றை வண்ணம் வாரியாக வாக்குச்சீட்டுகளை தனித்தனியாக பிரித்தனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு கவன்சிலருக்கான பச்சை நிற சீட்டு, ஊராட்சி தலைவருக்கான இளம் சிவப்பு நிற சீட்டு, ஊராட்சி உறுப்பினருக்கான வெள்ளை நிற சீட்டு என தனித்தனியாக பிரிக்கப்பட்டன.
அதன் பிறகு இந்த ஓட்டுச்சீட்டுகளை மீண்டும் 50-50 ஆக கட்டினார்கள். இதன் பிறகு ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக எண்ணப்படும் கூட்ட அரங்கத்திற்கு இந்த கட்டுக்கள் அனுப்பப்பட்டன. அங்கு வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் ஓட்டு எண்ணும் பணி நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கான ஓட்டுகளும் ஒரே கட்டிடத்தில் 4 இடங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
140 மாவட்ட கவுன்சிலர் பதவி ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் காலை 10 மணிக்கு மேல் முன்னணி நிலவரங்கள் தெரிய ஆரம்பித்தன.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளிலுமே ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. தான் முன்னிலையில் இருந்தது. தி.மு.க. அனைத்து பதவிகளிலும் 2 இலக்க எண்களில் முன்னிலை பெற்றிருக்க அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒற்றை இலக்க எண்களிலேயே முன்னிலையில் இருந்தன.
மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள மாவட்ட பஞ்சாயத்து, கவுன்சிலர் பதவிகளில் 34இடங்களில் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. அ.தி.மு.க. 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது.
Related Tags :
Next Story