1977-ம் ஆண்டு முதல் 500 கிலோ கோவில் தங்க நகைகள் உருக்கப்பட்டுள்ளன ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்


1977-ம் ஆண்டு முதல் 500 கிலோ கோவில் தங்க நகைகள் உருக்கப்பட்டுள்ளன ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2021 11:12 PM GMT (Updated: 12 Oct 2021 11:12 PM GMT)

தமிழக கோவில்களில் 1977-ம் ஆண்டு முதல் 500 கிலோ தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது.

சென்னை,

தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் 2 வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கோவில்களில் என்னென்ன நகைகள் உள்ளன என்பன குறித்து பதிவேடுகள் இல்லை. இதனால் நகைகளை உருக்கத் தடை விதிக்க வேண்டும். கோவில்களில் புராதன நகைகள் எவை, கோவிலுக்குத் தேவையான நகைகள் எவை என்பது குறித்தும் முதலில் கண்டறிய வேண்டும்’ என்று வாதிட்டார்.

500 கிலோ தங்கம்

மேலும், ‘தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் சுமார் 2 ஆயிரத்து 137 கிலோ தங்கத்தை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. எனவே, நகைகளை தணிக்கை செய்யாமல் உருக்கக்கூடாது’ என்றும் மனுதாரர் வக்கீல் தன் வாதத்தில் கூறினார்.

அதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘1977-ம் ஆண்டு முதல் கோவில் நகைகள் உருக்கப்பட்டு வருகின்றன. 500 கிலோ நகைகள் ஏற்கனவே உருக்கப்பட்டு தங்கக்கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ.11 கோடி வட்டி வருகிறது. நகைகளை தணிக்கை செய்ய சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற 2 நீதிபதிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக செப்டம்பர் 9-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி, அந்த அரசாணையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

தள்ளிவைப்பு

இதையடுத்து, இந்தவிவகாரம் குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story