மதுரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா


மதுரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா
x
தினத்தந்தி 1 Jan 2022 10:22 PM GMT (Updated: 1 Jan 2022 10:22 PM GMT)

மதுரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழாவில் 50 ஆடுகளை பலியிட்டு, 10 ஆயிரம் பேருக்கு விருந்து பரிமாறப்பட்டது.

பாரம்பரிய திருவிழா

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே அனுப்பபட்டியில் காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.

இந்த விழாவில் பலியிடப்படுவதற்கான ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே தங்களது வயலுக்கு வந்திருப்பதக நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்தநிலையில், இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா நேற்று காலை நடந்தது. காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு தொடங்கிறது. பின்னர் நேர்த்திக்கடனாக கோவிலில் செலுத்தி வளர்க்கப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு உணவு சமைக்கப்பட்டது.

இலையை எடுப்பது இல்லை

50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம்.

இந்த இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலில் தரிசனத்திற்கு வருவர். நேற்று நடந்த கறி விருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.


Next Story