தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு


தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு
x
தினத்தந்தி 6 Jan 2022 12:16 AM GMT (Updated: 6 Jan 2022 12:53 AM GMT)

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கமும் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து 2020-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மட்டும் வருகிற 10-ந்தேதி வரை அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்தது.

இதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநில அரசுகளுக்கு உத்தரவு

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

உலகளவில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில், மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, கர்நாடக மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த்தொற்று வெகுவாக குறைந்து 27-12-2021 அன்றைய நாளில் 605 ஆக இருந்தது. பொது இடங்களில் கொரோனா நோய்த்தடுப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காததன் காரணத்தினால் தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து கடந்த 3-ந்தேதி 1,728 ஆக உள்ளது.

கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த தவறினால்பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கட்டுப்பாடுகள் விதிப்பு

இதில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, கொரோனா மேலாண்மைக்குழுவின் தலைவர் ஆர்.பூர்ணலிங்கம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவிவரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்படுகிறது.

இன்று முதல் இரவு ஊரடங்கு

அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின்போது சில அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும். அதாவது, மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையேயான பொது / தனியார் பஸ் சேவைகள் அனுமதிக்கப்படும். ஆனால், பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

பெட்ரோல் பங்குகள் செயல்படும்

இதேபோல், அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், ஆஸ்பத்திரிகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம்

வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் முழு முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசிய பணிகளான மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் வினியோகம், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகனப்போக்குவரத்து மற்றும் பெட்ரோல் - டீசல் பங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் ஆகியவை இயங்காது. முழு ஊரடங்கின்போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு தடை

9-ந்தேதி மற்றும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விமானம், ரெயில் மற்றும் பஸ்களில் பயணிப்பதற்காக விமானம், ரெயில் மற்றும் பஸ் நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும்போது, பயணச்சீட்டு வைத்துகொள்ள வேண்டும்.

மேலும், மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்து பள்ளிகளிலும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

கல்லூரிகளுக்கு விடுமுறை

பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு வருகிற 20-ந்தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. பஸ்கள் மற்றும் புறநகர் ரெயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல தடை

மெட்ரோ ரெயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. அனைத்து பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

மீன், காய்கறி சந்தைகள்

மீன் மற்றும் காய்கறி சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையங்களில் இருந்து செல்லும் பஸ்களை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களில் இருந்து பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

2 தவணை தடுப்பூசி கட்டாயம்

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் வருகிற 9-ந்தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்கு செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ள வேண்டும்.

100 பேருடன் திருமணத்துக்கு அனுமதி

உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 பேருடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் அனுமதிக்கப்படும். துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

50 சதவீத வாடிக்கையாளர்கள்

கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து சினிமா தியேட்டர்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், சலூன்கள்

உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியும், 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும். அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதியை தவிர்க்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டைவிட்டு வெளியே செல்லுமாறும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story